தெலுக் பங்லிமா காராங் தமிழ்ப்பள்ளிக்கு டிக்காம் லூர்ட்ஸ் வருகை

கோல லங்காட், ஜூன்.13

சிலாங்கூர், தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிற்கு விடுத்த அழைப்பை ஏற்று, அவர் சார்பில் மனித வள அமைச்சின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ், இன்று காலையில் அப்பள்ளிக்கு வருகை புரிந்தார்.

தேசிய நீரோட்டத்தில், கண்களிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு தமிழ்ப்பள்ளியைப் போல் காணப்படும் தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளிக்குத் தாம் மேற்கொண்ட வருகை, ஒரு சாதாரண வருகை என்றாலும் வண்ணமயமான உலகத்திற்குள் தாம் காலடி வைத்தது போன்ற உணர்வு மேலிட்டதாக டிக்காம் லூர்ட்ஸ் குறிப்பிட்டார்.

உள்ளூர் கவுன்சிலர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் தாம் மேற்கொண்ட வருகையின் போது பள்ளி தலைமையாசிரியர் திருமதி லோகேஸ்வரி மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மருதை ஆகியோர் பள்ளியின் சாதனை குறித்து விவரித்தனர்.

அத்துடன் மாணவர்கள், பேச்சுத்திறன் மற்றும் கவித்திறன் குறித்து தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியது தம்மை மெய் சிலிர்க்க வைத்ததாக டிக்காம் லூர்ட்ஸ் குறிப்பிட்டார்.

மேலும் பள்ளி எதிர்நோக்கியுள்ள வடிகால் பிரச்சினை, குறைந்த வசதிகள், வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் குறித்தும் அவர்களிடமிருந்து செவிமடுக்க முடிந்ததாக டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்தார்.

எனினும் இப்பள்ளி மறக்கப்படவில்லை. பள்ளிக்கு சமமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதற்குக் கல்வி அமைச்சசுடன் இணைந்து பள்ளியின் பிரச்னை ஆராயப்படும் என்று டிக்காம் லூர்ட்ஸ் உறுதி அளித்தார்.

அத்துடன் மனித வள அமைச்சிலிருந்து ஏஅய் மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையில் கற்றல் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது குறித்து திட்டமிடப்படும் என்று டிக்காம் லூர்ட்ஸ் உறுதிமொழி கூறினார்.

WATCH OUR LATEST NEWS