ஷா ஆலாம், ஜூன்.13-
திரவ மின் சிகரெட் என்ற போர்வையில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த கும்பலை சிலாங்கூர் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் கிளேங் உத்தாரா மற்றும் சுங்கை பூலோவில் போலீசார் மேற்கொண்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 50 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளை உள்ளடக்கிய திரவ மின் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கும்பல் முறியடிக்கப்பட்டது மூலம் 21 க்கும் 38 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு பெண்கள் உட்பட இரண்டு உள்ளூர்வாசிகள் மற்றும் பத்து அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இவ்வாண்டில் மின் சிகரெட் வடிவில் போதைப்பொருளைத் தவறாக பயன்படுத்தியக் கும்பலை முறியடிப்பதில் இது சிலாங்கூர் மாநில போலீஸ் துறைக்கு மிகப் பெரிய வெற்றியாகும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் ஓமார் கான் இதனைக் குறிப்பிட்டார்.