உயிர் தப்பிய ஒரே பயணியைச் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி, ஜூன்.13-

குஜராத், ஆமதாபாத்தில் ஏர் இந்தியா, போயிங் டிரிம்லைனர் விமானம் விழுந்து நொறுங்கிய பேரிடரில் 242 பயணிகளில் உயிர் தப்பிய ஒரே பயணியான பிரிட்டிஷ் பிரஜையை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.
ஆமதாபாத்தில் உள்ள பொது மருத்துவமனையில் C7 ஆவது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் பிரஜையான 40 வயது ரமேஸ் விஸ்வாஷ் குமாரை, நேரில் சந்தித்த பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

உடல் நலம் தேறுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று மோடி உறுதி அளித்தார்.

நேற்று பிற்பகலில் நிகழ்ந்த இந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் விமானத்தின் 11A இருக்கையில் அமர்ந்திருந்த ரமேஷ், அவசர வெளியேறும் வாயில், அருகாமையிலேயே இருந்ததால் கதவைத் திறந்து விமானத்திலிருந்து குதித்துள்ளார்.

தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ள அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரைச் சந்தித்து விட்டு, ரமேஷ், தனது சகோதரனுடன் லண்டனுக்கு திரும்பும் வேளையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS