கோலாலம்பூர், ஜூன்.13
பொதுமக்களிடமிருந்து ஆக்கப்பூர்வமான குறைகூறல்களை அரச மலேசிய போலீஸ் படை வரவேற்பதாக அதன் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக போதைப்பொருள் மற்றும் இரண்டு செயற்கைத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, நேற்று உயர் நீதிமன்றத்தினால் ஆய்வாளர் யூசோப் ரவுத்தர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, பொதுமக்களின் ஆக்கப்பூர்வமான குறைகூறல்களையும், விமர்சனங்களையும் போலீஸ் படை வரவேற்பதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
யூசோப் ரவுத்தர் சம்பந்தப்பட்ட வழக்கில் புலன் விசாரணையில் ஏதேனும் தோய்வு அல்லது பலவீனங்கள் உள்ளனா? என்பதை ஆராய்வதற்கு நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமான தீர்ப்புக்காக போலீஸ் படை காத்திருப்பதாக டான் ஶ்ரீ ரஸாருடின் தெரிவித்தார்.
அதே வேளையில் அரச மலேசிய போலீஸ் படையின் நிலையான இயக்க நடைமுறையான எஸ்ஓபியை மறுமதிப்பீடு செய்வது உட்பட போலீஸ் படையின் புலனாய்வு நடைமுறைகளை மேம்படுத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக ஐஜிபி குறிப்பிட்டார்.