பத்துகேவ்ஸ், ஜூன்.14-
சிலாங்கூர் இந்தியர் நிர்வாகச் சங்கம் மற்றும் மலேசிய இந்தெகிரிடி நிர்வாகச் சங்கம் ஆகியவற்றின் கூட்டங்கள், அவற்றின் தலைவர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தலைமையில் நேற்று பத்துகேவ்ஸ், ஷெங்கா கொன்வென்ஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விரு இயக்கங்களின் தலைவர் என்ற முறையில் டாக்டர் சசத்திய பிரகாஷ் இக்கூட்டங்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தினார்.
மலேசிய இந்தியர்களின் சமூகவியல் பொருளாதாரம் மற்றும் அவர்களின் நலன் சார்ந்த வியூகம் நிறைந்த விவகாரங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்திய சமுதாயத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வாயப்புகளைப் பெற்றுத் தருவதில் கூட்டு மனப்பான்மையுடன் குரல் கொடுப்பதில் இவ்விரு இயக்கங்களும் தங்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கம் இதில் முதன்மையாக விவாதிக்கப்பட்டது.
பிரதமர் துறையின் இந்தியர்களுக்கான சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இந்தியர்களுக்கான சலுகைகளை எவ்வாறு பெறுவது குறித்து முக்கியமாக அலசி ஆராயப்பட்டது. அத்துடன் PEIS ( பெய்ஸ் ) எனப்படும் சிலாங்கூர் இந்திய நிர்வாக சங்கம் அமைக்கப்பட்ட நோக்கம் குறித்தும் டாக்டர் சத்திய பிரகாஷ் விளக்கம் அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் மலேசிய இந்தியர்களுக்கான MIA முறையையும் டாக்டர் சத்திய பிரகாஷ் அறிமுகப்படுத்தினார்.
இந்திய சமூகத்திற்கு மிக ஆக்கப்பூர்வமான முறையில் தகவல்களைச் சென்றடைவது, அவர்களுக்கான உதவிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து தெரியப்படுத்தும் இலக்கவியல் முறையில் இந்த MIA அமைந்திருப்பது குறித்து டாக்டர் சத்திய பிரகாஷ் விளக்கம் அளித்தார்.
பல்வேறு தரப்பினருடன் உதவியுடன் இந்திய சமூகத்தை வளப்படுத்துவதற்கான முயற்சிக்குரிய அணுகுமுறைகளை வகுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இது அமைந்தது என்று தாராளமாகக் கூறலாம்.