குவாந்தான், ஜூன்.15-
இன்று அதிகாலை நடைபெற்ற ஆறு அதிரடிச் சோதனைகளில், 85 பெண்கள் உட்பட 99 வெளிநாட்டவர்கள் பகாங், குவாந்தானில் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் கைது செய்யப்பட்டனர். இந்தச் சோதனை நடவடிக்கையின் போது 369 பேர் சோதனை செய்யப்பட்டதாக பகாங் குடிநுழைவுத் துறை இயக்குநர் நுர்சஃபாரிஸா இஹ்சான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் தாய்லாந்து, லாவோஸ், வங்காளதேசம், யமன், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 முதல் 40 வயதுடையவர்கள். பெரும்பாலான வெளிநாட்டுப் பெண்கள் வீசேட் போன்ற செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யும் ஜிஆர்ஓ பெண்களாகப் பணியாற்றியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் கட்டுமானம், துப்புரவுத் துறைகளுக்கான அனுமதி வைத்திருப்பவர்கள். மேலும் சிலர் சுற்றுலா அனுமதி மட்டுமே வைத்திருப்பவர்கள் ஆவர்.