மலேசிய ஊடகங்களுக்கு உதவ 30 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன்.14-

நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மாற்றம் மற்றும் உள்ளடக்க உற்பத்தியில் புதிய பயன்பாடுகளைச் செயல்படுத்த உதவுவதற்காக அரசாங்கம் 30 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

ஊடகத்துறை உலகில், குறிப்பாக இளம் ஊடகவியலாளர்கள் பின்தங்கி விடாமல், கால மாற்றத்திற்கு ஏற்ப, தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதனை உறுதிச் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

ஊடகவியலாளர்களின் தயாரிப்புத் திறன்களின் தரம் சிறப்பாக இருப்பதை உறுதிச் செய்வதற்கு தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீலுடன் தாம் விவாதித்தாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் உதவும் தனது தார்மீக ஆதரவை டத்தோ ஃபாமி வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே ஊடகவியல் வரலாற்றில் முதல் முறையாக அரசாங்கம் 30 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

பொதுவாக, டிஜிட்டல் மாற்றம் எவ்வளவு நடந்தாலும், ஊடகவியலாளர்களுக்குக் குறிப்பாக இளையோர்களுக்குப் பயிற்சி பெறுவதற்குரிய நிதி வளம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அந்த வகையில் ஏஐயின் மாற்றங்களுக்கு ஏற்ப ஊடகவியலாளர்கள் பின் தங்கி விடாமல் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இன்று கோலாலம்பூர் உலக வாணிப மண்படத்தில் ஹவானா எனப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்கள் தினத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS