கோலாலம்பூர், ஜூன்.16-
கோலாலம்பூரிலிருந்து கோத்தா பாருவிற்குப் புறப்பட்ட விமானம், 30 நிமிட பயணத்திற்குப் பின்னர் மீண்டும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கே திரும்பியது.
விமானம் அவசரமாக கேஎல்ஐஏவிற்குத் திரும்பியது, பயணிகள் மத்தியில் ஒரு பதட்டமான சூழலை ஏற்படுத்தியது என்று 32 வயது நூருல் ஹஃபிஸா என்பவர் தனக்கு ஏற்பட்ட நூதன அனுபவத்தை முகநூலில் பகிர்ந்து கொண்டார்.
விமானத்தின் இறக்கைக்கு அருகில் தாம் அமர்ந்திருந்த வேளையில் விமானத்தின் இயந்திரப் பகுதியிலிருந்து ஒரு வித்தியாசமான சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானதாக அவர் குறிப்பிட்டார்.
வீடு திரும்பும் ஆவலில் இருந்த தமக்கு மிகுந்த நடுக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார். ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான அதிர்ச்சி இன்னமும் மறையாத நிலையில் இந்தச் சம்பவம் தமக்கு பயத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.