கோலாலம்பூர், ஜூன்.16-
அரசாணை உத்தரவு தொடர்பில் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ அஹ்மாட் தெரிருடின் முகமட் சாலேவிற்கு எதிராக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், போலீசில் புகார் செய்துள்ளார்.
நஜீப்பின் உத்தரவின் பேரில் இன்று திங்கட்கிழமை, கோலாலம்பூர், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நஜீப்பின் முதன்மை வழக்கறிஞர் டான் ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா தெரிவித்தார்.
இதற்கு முன்பு, சிறை அல்லது காஜாங் போலீஸ் நிலையத்தில் இப்படியொரு புகார் செய்வதற்குச் சிறைச்சாலை இலாகாவில் நஜீப் அனுமதி கோரினார். ஆனால், சரியான பதில் வழங்கப்படாததால் அவரின் உத்தரவின் பேரில் இப்புகாரைத் தாம் அளித்துள்ளதாக ஷாஃபி விளக்கினார்.