கோலாலம்பூர், ஜூன்.17-
கோலாலம்பூர், செராஸ், ஜாலான் லோக் யூவில் உள்ள ஒரு பேரங்காடி முன்புறம் இன்று காலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
தனிநபர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்று இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. அந்தப் பேரங்காடி முன்புறம் ஆடவர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்று சம்பந்தப்பட்ட நபர்களை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கி பிரயோகம் நடத்துவது, அவ்வழியே கடந்த வாகனம் ஒன்றின் டேஷ்கேம் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகp பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் கோலாலம்பூர் மாநகரில் நிகழ்ந்த இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 10.50 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்ற இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இன்று காலையில் நிகழ்ந்த சம்பவத்தில் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட இரு ஆடவர்கள், அந்த பேரங்காடி முன்புறம் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை உறுதிப்படுத்திய செராஸ் மாவட்ட துணை போலீஸ் தலைவர், ரிட்ஸுவான் காலிட், இது தொடர்பில் போலீசார் ஓர் அறிக்கையை வெளியிடுவர் என்றார்.