மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ G. பழனிவேல் காலமானார்

கோலாலம்பூர், ஜூன்.17-

மஇகா முன்னாள் தேசியத் தலைவரும், இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் முன்னாள் அமைச்சருமான டான்ஸ்ரீ G. பழனிவேல் காலமானார். அவருக்கு வயது 75.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த டான்ஸ்ரீ பழனிவேல், இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தனது இறுதி மூச்சை விட்டதாக மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ T. முருகையா, பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

மைகாவிற்குத் தலைமையேற்று, 31 ஆண்டு காலமாக கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பில் இருந்த காலஞ்சென்ற துன். எஸ். சாமிவேலுவிடமிருந்து எட்டாவது மஇகா தேசியத் தலைவராக கடந்த 2010 ஆம் ஆண்டில் தலைமைப் பொறுப்பை ஏற்ற, முன்னாள் கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினரான பழனிவேல், 2015 ஆம் ஆண்டு ஜுன் 17 ஆம் தேதி வரை அப்பொறுப்பை வகித்து வந்தார்.

முன்னதாக, பழனிவேல், மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1949 ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதி பினாங்கில் பிறந்தவரான பழனிவேல், 1972 ஆம் ஆண்டில் மலாயா பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றார்.

தொடக்கத்தில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வியல் துறையில் நிர்வாக இயக்குநராகப் பணியை மேற்கொண்ட பழனிவேல், பின்னர் குவாந்தான், காடிர் அடாபி காலேஜ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணியை மேற்கொண்டார்.

1977 ஆம் ஆண்டு தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவில் துணை ஆசிரியராகத் தன்னைப் பிணைத்துக் கொண்ட பழனிவேல், 1984 ஆம் ஆண்டு பெர்னாமாவில் பொருளாதாரச் செய்திக்கான ஆசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டார்.

பெர்னாமாவில் இணைவதற்கு முன்னதாக பழனிவேல், கெடா, பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் காட்சிச்சாலையில் வரலாற்று ஆய்வியல் அதிகாரியாகப் பணியாற்றினார்.

பெர்னாமாவில் இணைந்திருந்த வேளையில் 1987 ஆம் ஆண்டு மஇகா தேசியத் தலைவர் துன் எஸ். சாமிவேலுவின் பத்திரிகைச் செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்டார்.

1968 ஆம் ஆண்டு மஇகாவில் ஓர் உறுப்பினராக சேர்ந்த பழனிவேலின் தீவிர அரசியல் பிரவேசம் 1990 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் முறையாக மஇகா சார்பில் பாரிசான் நேஷனல் வேட்பாளராக பழனிவேல் அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார்.

பழனிவேலின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு துன் சாமிவேலுவின் மிகுந்த செல்லப் பிள்ளையாக பழனிவேல் பாதுகாக்கப்பட்டார்.

உலு சிலாங்கூர் வெற்றிக்குப் பிறகு பெர்ஜெயா குரூப்பில் ஓர் இயக்குநராக நியமிக்கப்பட்ட பழனிவேல், 1995 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் உலு சிலாங்கூர் தொகுதியைத் தற்காத்துக் கொண்டதைத் தொடர்ந்து மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அந்த அமைச்சின் துணை அமைச்சராகவும் பழனிவேல் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக அவர், தோட்டம் மற்றும் மூலத் தொழில்துறை துணை அமைச்சராகப் பதவி வகித்தார்.

2010 ஆம் ஆண்டு துன் சாமிவேலு பதவி விலகியப் பின்னர் மஇகா தேசியத் தலைவராக நியமிக்கப்பட்ட பழனிவேல், 2008 ஆம் ஆண்டு உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியைத் தற்காத்துக் கொள்ளத் தவறினார். 2010 இல் மஇகாவின் தேசியத் தலைவாக பொறுப்பேற்ற பின்னர் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமைத்துவதில் பழனிவேல், ஒரு செனட்டராக நியமிக்கப்பட்டு, பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மஇகா சார்பில் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் 2008 ஆம் ஆண்டு முதல் மனித வள அமைச்சராக இருந்த கட்சியின் மூத்த உதவித் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியத்திற்கு அடுத்து மஇகா மற்றொரு முழு அமைச்சர் பதவியைப் பழனிவேல் மூலம் பெற்றது.

34 ஆண்டுகளுக்கு முன்பு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் தலைமைத்துவதில் டான்ஸ்ரீ ஆதி. நாகப்பன் மறைவின் மூலம் ஒரு முழு அமைச்சர் பதவியை மஇகா இழந்தது.

அதன் பின்னர் இரண்டாவது முழு அமைச்சர் பதவியை மஇகா மீட்டது, பழனிவேல் தலைமைத்துவத்தில்தான் என்பது வரலாற்றுக் குறிப்பாகும்.

2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் பழனிவேல் வெற்றி பெற்றது மூலம் அவர் இயற்கை வளம் மற்றும் சூற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு மஇகா தலைமைத்துவதில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து , ROS எனும் தேசிய பதிவு இலாகாவிற்கு எதிராக வழக்கு தொடுத்து, கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றதால், பழனிவேல் தலைவர் பதவிலிருந்து அகற்றப்பட்டதுடன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

காலஞ்சென்ற பழனிவேலுக்கு புவான்ஸ்ரீ கனகம் என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர்.

WATCH OUR LATEST NEWS