இரு போலீஸ்காரர்கள் உட்பட நால்வருக்கு 12 ஆண்டுச் சிறை

கோலாலம்பூர், ஜூன்.17-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 11 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையிட்ட குற்றத்திற்காக இரண்டு போலீஸ்காரர்கள் உட்பட நால்வருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் ஒவ்வொருவருக்கும் தலா 5 பிரம்படித் தண்டனை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஹஸ்ரோல் இர்மேய் அபு ஹசிம், முகமட் ஹெல்மி ஜமாலுடின், அமிர் மொக்தார் மற்றும் முகமட் ரிட்வான் அஸ்மான் ஆகிய நால்வரும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் சான் சோவ் லின்னில் உள்ள ஒரு கட்டடத்தின் கார் நிறுத்தும் இடத்தில் ங்கான் ஹொக் லியோங் என்ற வர்த்தகரை மடக்கி ரொக்கப் பணத்தைக் கொள்ளையிட்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இரு போலீஸ்காரர்கள் உட்பட நால்வருக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படைச் சந்தேகங்களை எழுப்புவதில் அவர்கள் தவறிவிட்டனர் என்று நீதிபதி ஹமிடா முகமட் டெரி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS