துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்களை அடையாளம் காண போலீசார் தீவிர நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூன்.17-

திரைப்படங்களில் வருவதைப் போன்று கோலாலம்பூர், செராஸ், ஜாலான் லோக் யூவில் ஒரு பேரங்காடி முன்புறம் இன்று காலையில் கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய கும்பலைப் போலீசார் அடையாளம் காணும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

இருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொலைச் செய்யப்பட்டது தொடர்பில் போலீசார் இதனைக் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருவதாக கோலாலாம்பூர் போலீஸ் துணைத் தலைவர் துணை ஆணையர் டத்தோ முகமட் யுசுஃப் ஜான் தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்திற்கான பின்னணி தற்போது ஆராயப்பட்டு வரும் வேளையில் இதில் ஈடுபட்டுள்ள தனிநபர்களையும் அடையாளம் கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் வேளையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புலன் விசாரணைக்கு உதவும் வகையில் போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு டத்தோ முகமட் யுசுஃப் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS