நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற சீர்த்திருத்தங்களை அமல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை – பிரதமர் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஜூன்,17-

நாட்டில் இலக்குக்கு உரிய எரிபொருள் உதவித் தொகை, வரி, நிதி மற்றும் சுகாதார அமைப்பு மேம்பாடுகள் உள்ளிட்ட கட்டமைப்புச் சீர்த் திருத்தங்களை அமல்படுத்துவதில் அரசாங்கம் இனி தாமதப்படுத்த முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உதாரணமாக, எரிபொருளுக்கு உதவித் தொகை வழங்குவது, குறிப்பாக பெட்ரோல் ரோன்95க்கு உதவித் தொகை வழங்கப்படுவது மூலம் அது, இதுவரையில் பணக்காரர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் பயனளித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

ரோன்95 பெட்ரோலுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது, அது பணக்காரர்களுக்கும் தொடர்ந்து நன்மை அளித்து வருகிறது. உண்மையிலே இலக்குக்கு உரிய மக்களுக்கு மட்டுமே உதவித் தொகை அடிப்படையிலான உதவிகள் சென்றடைந்து இருக்க வேண்டும். எனவே தொடர்ந்து அந்த பழையை அணுகுமுறையை அரசாங்கம் கையாள இயலாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

உதவித் தொகைகள், தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டால் அவை தவறல்ல. ஆனால், பணக்காரர்களும், வரி செலுத்தாத வெளிநாட்டினரும் அந்த அனுகூலத்தை அனுபவித்து வருவது எந்த வகையில் நியாயம்? இது நாட்டிற்குச் சுமையை ஏற்படுத்தாதா? என்று டத்தோஸ்ரீ அன்வார் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் அமல்படுத்தக்கூடிய இந்த சீர்த் திருத்தங்கள் ஓர் ஆடம்பரம் அல்ல, ஆனால் அது ஒரு தேசியத் தேவை. நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற அவற்றைச் செயல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்று அவர் விளக்கினார்.

கோலாலம்பூரில் மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா இன்று ஏற்பாடு செய்த 2025 ஆம் ஆண்டுக்கான சாசானா கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்துகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS