தாயாரையும், சகோதரனையும் வெட்டிக் கொன்ற மாணவன் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்

மலாக்கா, ஜூன்.18-

தனது தாயாரையும், சகோதரனையும் கத்தியால் வெட்டிக் கொன்றதாக நம்பப்படும் எஸ்பிஎம் மாணவன் ஒருவன், இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார் என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டொப்பர் பாதிட் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 12 ஆம் தேதி மலாக்கா, புக்கிட் ரம்பாய், தாமான் ரம்பாய் முத்தியாராவில் உள்ள தங்கள் வீட்டில் நடந்த இச்சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு ஏதுவாக கடந்த ஆறு நாட்களாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த 17 வயதுடைய அந்த மாணவன் மீது நடைபெற்ற விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக ஏசிபி கிரிஸ்டொப்பர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் அந்த மாணவனின் தாயாரான 51 வயது பள்ளி ஆசிரியர், அவனது 21 வயது சகோதரன் ஆகியோர் கடும் வெட்டுக் காயங்களுடன் வீட்டில் இறந்து கிடந்தனர்.

அந்த மாணவனின் 13 வயது இளைய சகோதரன், கடும் காயங்களுக்கு ஆளானான். தாயாரும், சகோதரனும் தன்னைப் படிக்கச் சொல்லி, நெருக்குதல் அளித்து வந்ததால், தாம் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

WATCH OUR LATEST NEWS