கார், லோரியுடன் மோதல்: கணவன், மனைவி உயிரிழந்தனர்

பெக்கான், ஜூன்.18-

கார் ஒன்று லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கணவன், மனைவி உயிரிழந்தனர். அவர்களின் மூன்று பிள்ளைகள் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இந்தச் சம்பவம், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் பகாங், பெக்கான், பத்து 8, லெப்பார் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இவ்விபத்தில், பெக்கான், ஃபெல்டா சினி திமோர் ஒன்றைச் சேர்ந்த 44 வயது ஜமால் அஸிஸுல் சமாட் மற்றும் அவரின் 41 வயது மனைவி லிஸாவாத்தி அப்துல்லா ஆகியோர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஸைடி மாட் ஸின் தெரிவித்தார்.

அந்த தம்பதியரின் 6 க்கும் 17 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று பிள்ளைகள் கடுங்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் லோரி ஓட்டுநர் 31 வயது கே. லிங்கேஸ்வரன் எவ்வித காயத்திற்கும் ஆளாகவில்லை. அந்த லோரியில் இருந்த 24 மற்றும் 37 வயதுடைய மேலும் இருவர் சொற்பக் காயங்களுக்கு ஆளானதாக முகமட் ஸைடி கூறினார்.

WATCH OUR LATEST NEWS