ஈரான் மீது தாக்குதல் தொடுக்கத் தயார் நிலையில் அமெரிக்கா

வாஷிங்டன், ஜூன்.19-

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான உச்சக்கட்ட மோதலின் விளைவாக, ஈரான் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் அவசரக் கூட்டத்தில் டிரம்ப் இந்த தனிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார் என்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அவர் எடுத்துள்ள இந்த முடிவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் அடுத்த சில தினங்களில் எந்த நேரத்திலும் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் தொடுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஈரான் அணு ஆயுத திட்டத்தைக் கைவிடுகிறதா என்று பார்த்து விட்டு அதன்பின் தாக்குதல் நடத்தலாம் என டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அதே வேளையில் அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ஈரானுக்கு எதிராக டிரம்ப் இந்தத் தாக்குதலை நடத்த தன்னிச்சையாக முடிவு செய்ய இயலாது என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், மத்தியக் கிழக்கில் அமெரிக்க, தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படுவதற்கான அறிகுறியே இது என்று கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS