கோலாலம்பூர், ஜூன்.19-
ஜோகூர் அரச குடும்பத்தினரைத் தொடர்புபடுத்தி போலி திருமணச் சான்றிதழைச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக முன்னாள் மாடல் அழகி ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
43 வயது பெர்சானா அவ்ரில் சொல்லுன்டா என்ற அந்த மாடல் அழகி, கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி கிங் சார்ல்ஸ் என்ற டிக் டாக் கணக்கில் ஜோகூர் அரச குடும்பத்தினரைத் தொடர்புப்படுத்தி போலி திருமணச் சான்றிதழைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
சபா, கோத்தா கினபாலுவைச் சேர்ந்த அந்த மாடல் அழகி, ஜோகூர் பட்டத்து இளவரசர் தெங்கு மாஹ்கோத்தாவுக்கும், பட்டத்து இளவரசி ஷானாவிற்கும் இடையில் திருமணம் நடந்தது போன்று போலியான திருமணச் சான்றிதழைத் தனது டிக் டாக் கணக்கில் பதிவேற்றம் செய்யதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 5 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாடல் அழகி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.