கோலாலம்பூர், ஜூன்.19-
மலேசியக் கல்வி முறையைச் சீர்திருத்துவதற்கான மூன்று அவசர முன்னுரிமைகளை முன்மொழிந்துள்ள ஒரு கல்விமானாகிய டாக்டர் R. சிவபிரகாஷ், கடந்த இரண்டு தினங்களாக இரண்டு பரிந்துரைகளை முன்மொழிந்த வேளையில் இன்று இறுதிப் பாகமாக மூன்றாவது முன்னுரிமையைப் பரிந்துரைத்துள்ளார்.
கல்வித் தலைமைத்துவத்தில் நிர்வாக ஆளுமை மற்றும் நம்பகத்தன்மையை மீட்டெடுத்தலை தனது மூன்றாவது முன்னுரிமையாக டாக்டர் சிவபிரகாஷ் முன்மொழிந்துள்ளார்.
இதில் நடப்பு பிரச்சினை என்ன என்பதையும் அவர் விவரித்தார்.
போலிப் பட்டப்படிப்புச் சம்பவங்கள், அரசியல் ரீதியிலான நியமனங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறையில் உள்ள பலவீனங்கள் ஆகியவை கல்விக் கழகங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அரித்துவிட்டன என்று டாக்டர் சிவபிரகாஷ் சுட்டிக்காட்டினார்.
அவற்றுக்கான சான்றுகள் யாவை?
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை போலிக் கல்வித் தகுதிகளைக் கொண்டிருக்கின்ற கல்வித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட சில விவகாரங்கள் வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டில் Transparency Internasional Malaysia எனும் மலேசியாவின் அனைத்துலக வெளிப்படைத்தன்மையில் கல்வித்துறை நிர்வகிப்பின் குறையீடு, இறங்கும் முகமாகியுள்ளது என்பதை டாக்டர் சிவபிரகாஷ் தெளிவுப்படுத்தினார்.
இவற்றை நிவர்த்தி செய்ய முன்வைக்கப்படும் கொள்கை ரீதியிலான பரிந்துரைகள் யாவை?
- ஒரு சுயேட்சை கல்வி நிர்வாக ஆணையம் தோற்றுவிக்கப்பட வேண்டும்.
- தலைமைப் பதவிகளுக்கான தகுதிகளை சரிபார்த்து உறுதி செய்வதற்கு அதன் பரிசோதனை முறை கடுமையாக்கப்பட வேண்டும்.
- அமைச்சு மற்றும் தலைமைத்துவ தணிக்கை செயல்திறன் குறித்து பொது அறிக்கையை வெளியிடும் முறை அமல்படுத்தப்பட வேண்டும்.
இதனால், எதிர்பார்க்கப்படும் தாக்கம் யாவை?
- மலேசிய கல்வி அமைச்சு மற்றும் பள்ளிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்.
- பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தலைமைத்துவத்தில் தொழில்முறை நிபுணத்துவத்தை வளப்படுத்த முடியும்.
- தவிர, கல்விக் கொள்கைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் அதன் நீட்சியை மேம்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் சிவபிரகாஷ்.
முடிவுரைதான் என்ன ?
இந்த மூன்று முன்னுரிமைகளும் தனித் தனியாக பிரிக்கப்பட்டத் தன்மையைக் கொண்டது அல்ல. ஆனால், நீடித்து தாங்க வல்ல ஒரு கல்வி முறையை உருவாக்குவதில் இவை, ஒன்று மற்றொன்றுடன் தொடர்புடைய முதன்மையான தூண்களாகும்.
எனவே இப்பிரச்னை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பது மூலம், 2035 ஆம் ஆண்டு கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கான வேகத்தை மலேசியா திரும்பப் பெற முடியும். அத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்கக்கூடிய மனித மூலதன மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கு உதவ முடியும் என்று டாக்டர் சிவபிரகாஷ் கூறுகிறார்.