கோலாலம்பூர், ஜூன்.19-
கோலாலம்பூரில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரிக்பீல்ட்ஸிலும், திங்கட்கிழமை செராஸிலும் நிகழ்ந்த இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், குண்டர் கும்பல்கள் சம்பந்தப்பட்டதாகும் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழிகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளா? இல்லையா? என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ முகமட் யுசுஃப் ஜான் முகமட் தெரிவித்தார்.
இவ்விரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வரும் வேளையில் சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரிக்பீல்ட்ஸில் உள்ள முன்னணி உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
செராஸ், ஜாலான் லோக் யுவில் உள்ள பேரங்காடியின் முன்புறம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.
இவ்விரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளன.