புனே, ஜூன்.20-
புனேவிக் இருந்து டில்லிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் ரத்து செய்யப்பட்டது. முன்னதாக அவ்விமானம் டில்லியில் இருந்து மஹாராஷ்டிராவின் புனே நகருக்குச் சென்றது. விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் அதில் பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் புனேயில் இருந்து டில்லி செல்வது ரத்து செய்யப்பட்டது. விமானத்தை ஏர் இந்தியா பொறியாளர்கள் முழுமையாக சோதனை செய்து வருகின்றனர்.
அதனை அடுத்து டில்லி செல்ல வேண்டிய பயணிகளுக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், பயணிகளின் வசதிக்கு ஏற்ப டிக்கெட் ரத்து அல்லது வேறு நாளில் பயணம் ஏற்பாடு செய்து தரப்படும் எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியாவின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் விமானம் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் தரையில் இருந்தவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து விமானங்களை சோதனை செய்ய ஏர் இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.