கோலாலம்பூர், ஜூன்.20-
ஊழியர் சேமநிதி நிதி வாரியத்தின் இரண்டாம் கணக்கு வழியாக முன்மொழியப்பட்ட சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் என்பது தன்னார்வ அடிப்படையிலானது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார். இது பரந்த காப்பீட்டுத் திட்டங்களை விரும்பும் சந்தாதாரர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கானது என்றார்.
இந்த புதிய அணுகுமுறை, 16 மில்லியன் கேடபள்யுஎஸ்பி சந்தாதாரர்கள், தங்களின் இரண்டாம் கணக்கைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைச் சிகிச்சைகள் உட்பட சுகாதாரக் காப்பீட்டைப் பெற வழி வகுக்கிறது. மலேசியாவில் 32 விழுக்காடு சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் நோயாளிகளால் காப்பீட்டுப் பாதுகாப்பு இன்றி செலுத்தப்படுவதால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.