கோலாலம்பூர், ஜூன்.22-
நச்சுத்தன்மை வாய்ந்த பள்ளி நிர்வாகங்கள், அதிகரித்து வரும் டிஜிட்டல் தேவைகள், பெற்றோரின் இடையூறுகள் – இவற்றின் காரணமாக ஆசிரியர்கள் மத்தியில் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக தேசிய ஆசிரியர் சேவைகள் சங்கம் – என்யுடிபி தெரிவித்துள்ளது. மன அழுத்தத்தில் உள்ள ஆசிரியர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள் அல்லது வேலை இழப்பார்கள் என்ற பயத்தில் உதவி பெறுவதைத் தவிர்க்கிறார்கள் என்று என்யுடிபி பொதுச் செயலாளர் ஃபௌஸி சிஙோன் குறிப்பிட்டார்.
ஆசிரியர்களின் மனச்சோர்வு, Schizophrenia போன்ற நிலை குறித்த சமீபத்திய ஆய்வறிக்கைகள், இஃது ஒரு முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை என்பதைக் காட்டுகின்றன. இதனைத் தீர்க்க, பள்ளி நிர்வாகக் கொள்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மனநல ஆதரவை வழங்க வேண்டும் என்றும் என்யுடிபியும் பேஜ் எனப்படும் பெற்றோர் நடவடிக்கைக் குழுவும் கல்வி அமைச்சை வலியுறுத்தியுள்ளன.