புதுடெல்லி, ஜூன்.22-
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் போர் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர், நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இரு நாடுகளும் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஈரானில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வந்த இந்திய மத்திய அரசு, தற்போது இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் அனைவரையும், ‘ஆபரேஷன் சிந்து’ திட்டத்தில் மீட்டு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது. தற்போது, 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் வசித்து வருகின்றனர்.
இஸ்ரேலில் இருந்து வர விரும்பும் இந்தியர்களை ஒரு வாரத்திற்குள் மீட்டுக் கொண்டு வரவேண்டும். அவர்கள் எல்லைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு மீட்டு வரப்படுவார்கள். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.