ஜோகூர் பாரு, ஜூன்.23-
சமூக வலைத்தளம் வாயிலாக போதைப்பொருளை விற்பனை செய்து வந்ததாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை ஜோகூர் போலீசார் முறியடித்துள்ளனர்.
கடந்த ஜுன் 14 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள தாமான் முத்தியாரா ரினியில் உள்ள இரட்டை மாடி வீடோன்றில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோனையில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 615 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
சமூக வலைத்தளம் வாயிலாக போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு இக்கும்பல் தீவிர ஈடுபாட்டைக் கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. உள்ளூரைச் சேர்ந்த ஒரு தனி நபர் மற்றும் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனைக் குறிப்பிட்டார்.