ஸ்ரீ முருகன் கல்வி மையத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ டாக்டர் தம்பி ராஜா காலமானார்

கோலாலம்பூர், ஜூன்.23-

ஸ்ரீ முருகன் கல்வி மையத்தின் தோற்றுநரும், கல்வியாளரும், வழக்கறிஞருமான டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா காலமானார். அவருக்கு வயது 83.
மலாயாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுப் பேராசிரியரான டாக்டர் தம்பிராஜா, அப்பல்கலைக்கழத்தைச் சேர்ந்த 42 இந்திய மாணவர்கள் மூலம் எஸ்எம்சி எனப்படும் ஸ்ரீ முருகன் கல்வி மையத்தை 1982 இல் தோற்றுவித்தார்.

ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களைக் கல்வியின் வாயிலாக உயர்த்திய பெருமைக்குரிய கல்வி ஸ்தாபனமான ஸ்ரீ முருகன் கல்வி மையத்தைத் தோற்றுவித்து கல்விப் பணியைச் சீரும் சிறப்பாக முன்னெடுத்து வந்த டாக்டர் தம்பிராஜா, மறைவு, இந்திய சமுதாயத்திற்கு பேரிழப்பாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

இந்தியச் சமுதாயம் என்ற படகைக் கரை சேர்ப்பதற்கு துடுப்பு என்ற கல்வியே பிரதான சாதனம் என்பதை தனது மூச்சிலும், பேச்சிலும் இரண்டரறக் கலந்து, கல்விப் பணியை மேற்கொண்டு வந்த தம்பிராஜாவின் வழிகாட்டலில் உயர்ந்தவர்கள், இன்று நாடு முழுவதும் பல்வேறு உயரிய பொறுப்புகளில் உள்ளனர்.

டாக்டர் தம்பிராஜாவின் கல்விப் பணிக்கு அங்கீகாரமாக அவருக்கு 2012 இல் மாமன்னர் டான்ஸ்ரீ எனும் உயரிய விருது வழங்கி சிறப்பு செய்தார். அயலக இந்தியர்களின் வருடாந்திர மாநாடான இந்தியாவில் பிரவாசி மாநாட்டில் பாரதிய சம்மன் எனும் உயரிய விருதும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டார்.

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் இந்திய சமூகத்திற்கான சிறப்பு அமலாக்கக் குழு உட்பட தேசிய ஆலோசனை மன்றங்களிலும் டாக்டர் தம்பிராஜா தன்னடக்கமாக பல்வேறு கல்வி ஆலோசனைப் பணிளை வழங்கியுள்ளார்.

டாக்டர் தம்பிராஜா, தொலை நோக்குப் பார்வைக் கொண்டவர் மட்டும் அல்ல. ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் குறைந்த பட்சம் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என்ற தெளிவான நோக்கத்தைக் கொண்டு இருந்தார் என்று எஸ்எம்சியின் இணை இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

இந்திய மாணவர்கள் கல்வி வாயிலாகவே ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட சீலராக வளர முடியும் என்ற நோக்கிலேயே கடந்த 1982 ஆம் ஆண்டு எஸ்எம்சியைத் தோற்றுவித்தார் என்று சுரேன் குறிப்பிட்டார்.

பிரபல வழக்கறிஞர் காலஞ்சென்ற ஜெப்ரி பெர்னாண்டசுடன் பல்வேறு முன்னணி வழக்குகளில் டாக்டர் தம்பிராஜா ஆஜராகியுள்ளார்.

மலேசிய கல்வி அமைச்சுக்கு பல்வேறு வரலாற்று நூல்களை தந்த கல்விமானாகிய டாக்டர் தம்பிராஜாவின் நல்லுடல் நாளை, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அவரின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும். பிற்பகல் 3 மணிக்கு மேல் ஷா ஆலாம், செத்தியா ஆலாமில் நிர்வானாவில் அவரின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS