கோலாலம்பூர், ஜூன்.23-
கடும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் ஈரான் பதட்ட நிலை மத்தியில் அந்த நாட்டிலிருந்து 17 மலேசியர்கள் உள்பட 24 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
அவர்களை ஏற்றிய மலேசியன் ஏர்லைன்ஸ் MH 781 விமானம் நேற்றிரவு 11.03 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான
நிலையத்தின் முதலாவது முனையத்தை வந்தடைந்தது.
வெளியுறவு அமைச்சின் இரு வழி உறவுகள் பிரிவு துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ அஹ்மாட் ரோஸியா அப்துல் கானி, விமான நிலையத்தில் வந்தடைந்தவர்களை வரவேற்றார்.
நாடு திரும்பியவர்களில் 17 மலேசியர்கள், அவர்களின் பராமரிப்பில் உள்ள ஆறு ஈரானியர்கள் ஒரு சிங்கை பிரஜையும் அடங்குவர்.
தாங்கள் தெஹ்ரானிலிருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவைத் தரைமார்க்காகக் கடந்து வந்ததாக இந்த குழுவுக்கு தலைமை தாங்கிய ஈரானுக்கான மலேசியத் தூதர் கைரி ஓமார் கூறினார்.
மேற்கிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து விலகி, கிழக்குக் திசையில் நீண்ட பயணத்தைத் தேர்ந்தெடுக்க தாங்கள் முடிவெடுத்ததாக அவர் கூறினார்.
எல்லையைக் கடக்க மலேசியர்களை அனுமதிப்பதில் துருக்மெனிஸ்தான் அரசு நல்ல ஒத்துழைப்பை நல்கியது என்று அவர் குறிப்பிட்டார்.