போலி பங்கு முதலீட்டு மோசடிக் கும்பல் முறியடிப்பு: பத்து பேர் கைது

செர்டாங், ஜூன்.23-

மொத்தம் 399,787 வெள்ளி சம்பந்தப்பட்ட அந்நிய நாணய முதலீட்டு மோசடியில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்
கும்பலைச் சேர்ந்த பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பூச்சோங், பண்டார் புத்ரியில் உள்ள மையம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 21 முதல் 38 வயது வரையிலான ஏழு ஆடவர்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபாரிட் அஹ்மாட் கூறினார்.

இவர்கள் அனைவரும் நிர்வாகி, இணையத்தள வடிவமைப்பாளர், வாடிக்கையாளர் சேவை வழங்குநர், நிறுவன ஆவணங்களைக் கையாளும் நிர்வாகத் தரப்பினர் ஆகிய பணிகளை மேற்கொண்டு வந்ததாக அவர் சொன்னார். கடந்த ஆறு மாதங்களாக செயல்பட்டு வந்த இக்கும்பல் உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டிரை இலக்காகக் கொண்டு மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் உருவாக்கிய செயலி வாயிலாக இக்கும்பல் தொடக்கத்தில் கவர்ச்சிகரமான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS