தெலுக் இந்தான், ஜூன்.24-
ஃஎப்ஆர்யூ பிரிவைச் சேர்ந்த ஒன்பது போலீஸ்காரர்கள் மரணம், மேலும் ஒன்பது போலீஸ்காரர்கள் காயம் அடைந்த கோர விபத்துக்குக் காரணமான லோரியின் உரிமையாளருக்கு தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.
தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி லோரி உரிமையாளருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டும், அவர் ஆஜராகத் தவறிவிட்டார். இதனைத் தொடர்ந்து, அந்த லோரி உரிமையாளரைக் கைது செய்யும்படி நீதிமன்றம் இன்று கைது வாராண்டை பிறப்பித்துள்ளது.
சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் லோரி ஒட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இதற்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
கடந்த மே 13 ஆம் தேதி, தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் பாதுகாப்புப் பணியை முடித்துக் கொண்டு அரச மலேசிய போலீஸ் படையின் ஃஎப்ஆர்யூ லோரி, ஈப்போவிற்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது, கற்களை ஏற்றி வந்த லோரியால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒன்பது போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.