மலாக்கா, ஜூன்.24-
காருக்குள் மிக நெருக்கமாக இருந்த இளம் ஜோடியினரை, மடக்கி, நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 2 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நான்கு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 க்கும், 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு போலீஸ்காரர்கள், இன்று காலையில் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் ஜுன் 28 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பெற்றது.
நேற்று திங்கட்கிழமை, மலாக்கா எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்ட அந்த நான்கு போலீஸ்காரர்களையும் சம்பந்தப்பட்ட தம்பதியர் துல்லியமாக அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆய்ர் குரோ, ஜாலான் மலாக்கா மால் பேரங்காடி மையத்தின் முன்புறம் கார் நிறுத்தும் இடத்தில் அத்தம்பதியரை மடக்கி லஞ்சம் கோரியதாக அந்த நான்கு போலீஸ்காரர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.