கோலாலம்பூர், ஜூன்.24-
கோலாலம்பூர் மாநகரில் ஜாலான் புடுவில் கடந்த 15 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் ஜசெக. தலைமையகம், தனது சொந்த தலைமையகக் கட்டடத்தை எழுப்பவிருக்கிறது.
ஜசெக தலைமையகக் கட்டடத்தை எழுப்பும் பணிக்கு கட்சியின் உதவிப் பொருளாளரான ங் ஸே ஹான் தலைமையேற்பார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
ஜசெக.வில் அதிகரித்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் நிர்வாகப் பணிகளின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு சொந்தக் கட்டடத்தை எழுப்புவதற்கான காலம் கனிந்து இருப்பதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பெட்டாலிங் ஜெயாவில் செயல்பட்டு வந்த ஜசெக தலைமையகம், கடந்த 2010 ஆம் ஆண்டில் கோலாலம்பூர், ஜாலான் புடு அருகில் உள்ள ஜாலான் யுவிற்கு மாற்றப்பட்டது.
ஜசெக சொந்தமாக அரசியல் பள்ளி ஒன்றையும் தோற்றுவிக்கவிருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார். அந்த பள்ளியை தோற்றுவிக்கும் திட்டத்திற்கு கட்சியின் துணைத் தலைவர் ங்கா கோர் மிங் தலைமையேற்பார் என்று அவர் மேலும் கூறினார்.