மூடா கட்சியின் முன்னாள் தலைவர் சையிட் சாடிக் விடுதலை

புத்ராஜெயா, ஜூன்.25-

மூடா கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சருமான சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான், லஞ்சம் மற்றும் சட்டவிரோதப் பண மாற்றுக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சையிட் சாடிக்கின் மேல்முறையீட்டை விசாரணை செய்த புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம், அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்வதாக இன்று காலையில் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன் மூலம் மூவார் நாடாளுமன்ற உறுப்பினரான சையிட் சாடிக்கிற்கு எதிராக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த 7 ஆண்டுச் சிறைத் தண்டனை, 2 பிரம்படித் தண்டனை மற்றும் ஒரு கோடி ரிங்கிட் அபராதம் மீதான தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற விசாரணையில், சையிட் சாடிக், எதிர்வாதம் செய்ய அழைக்கப்படாமலேயே விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி நோர்டின் படாருடின் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சையிட் சாடிக்கிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள லஞ்சம், சட்டவிரோதப் பண மாற்றம், நேர்மையற்ற செயல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் போதுமான ஆதாரங்களை நிரூபிக்க பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி நோர்டின் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இத்தகையக் குற்றங்களில் அந்த மூவார் எம்.பி. உடந்தையாக இருந்துள்ளார் என்பதற்குப் போதுமான தெளிவும், ஆதாரமும் இல்லை என நீதிபதி நோர்டின் தமது தீர்ப்பில் வர்ணித்தார்.

WATCH OUR LATEST NEWS