புத்ராஜெயா, ஜூன்.25-
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வூ கா லியோங் புத்ராஜெயாவில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
பேரா மாநில உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் அமைச்சருடன் வூ கா லியோங் இந்தச் சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது நாட்டு மக்களின் நலன்கள் தொடர்பான பல்வேறு கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. இதில் எல்பிஜி சிலிண்டர் பற்றிய அண்மைய பிரச்சனை மற்றும் ரஹ்மா விற்பனைத் திட்டம் ஆகியவையும் அடங்கும்.
வணிகர்களும் பொதுமக்களும் சமமாகப் பயனடையுமாறு அமைச்சின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதுடன், மக்களை மையப்படுத்தக்கூடிய அணுகுமுறை மிக அவசியம் என்பதையும் இச்சந்திப்பின் போது அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலியிடம் வூ கா லியோங் Woo வலியுறுத்தினார்.
மேலும், ஷோப்பி, லஸாடா போன்ற இ-வணிகத் தளங்களில் அனைத்து தயாரிப்புகளுக்கும் மலாய் மொழியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தேசிய மொழியை மதிக்க வேண்டிய அவசியம் இருப்பதுடன், இக்கொள்கை வணிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
அமைச்சர் டத்தோ அர்மிஸான், இக்கொள்கை குறித்து திறந்த மனப்பான்மையுடன் பேசியதுடன், இப்போதைக்கு அந்த நடைமுறை, இடை நிறுத்தப்பட்டுள்ளது என்றும், விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தாக வூ கா லியோங் குறிப்பிட்டார்.