பெய்ஜிங், ஜூன்.25-
சீனாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி 80,000 பேர் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை இழந்துள்ளனர். சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அந்நாட்டின் ஹூனான், ஹூபே மாகாணங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
தெற்கு சீனாவில் உள்ள குய்சூ மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். கிட்டத்தட்ட 80,000 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோன்ஜியங், ரோன்ஜியங் நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. அங்கு பாயும் ஆறுகளின் நீர்மட்டம் வெகு வேகமாக உயர்ந்து வருகிறது.
எனவே, தாழ்வான பகுதிகளில வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களைப் பத்திரமாக மீட்கும் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.