கோலாலம்பூர், ஜூன்.25-
மலேசிய ஆயுதப் படையில் சீன சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டது குறித்து சர்ச்சை செய்து வரும் பாஸ் தலைவர் ஒருவருக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு மாநில ஜசெக தலைவர் ஸ்டீவன் சிம் கேட்டுக் கொண்டார்.
மலேசிய ஆயுதப் படையில் டத்தோ ஜோனி லிம் எங் செங், லெஃப்டனென் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். சீன சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆயுதப் படையில் மிகப் பெரிய உயர் பதவி வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.
டத்தோ ஜோனி லிம் நியமனம் குறித்து பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மருமகனும், பாஸ் கட்சியின் சுங்கை பூலோ தொகுதித் தலைவருமான ஸாஹாருடின் முகமட் கேள்வி எழுப்பியிருப்பது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது என்று மனித வள அமைச்சருமான ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
நாட்டின் இறையாண்மையைக் காப்பதற்காக மழை, வெயில் எனப் பாராமல் காடுகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆயிரக்கணக்கான வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் பாஸ் கட்சித் தலைவர் ஒருவர், வெளியிட்டுள்ள அறிக்கையானது நமது வீரர்களை அவமதிப்பதற்கு ஒப்பாகும் என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
இனத்துவேஷத் தன்மையில் பேசியிருக்கும் அந்த பாஸ் தலைவருக்கு எதிராக அமலாக்கத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.