சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொடூரக் கொலை: சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராகத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியது போலீஸ்

சிப்பாங், ஜூன்.26-

சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த 20 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று காலையில் சைபர்ஜெயாவில் தான் தங்கியிருந்த கொண்டோமினியம் விடுதி அறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த படுபாதகத்தைப் புரிந்த சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக போலீசார் தீவிரக் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

மனிஷா என்று அடையாளம் கூறப்பட்ட அந்த தனியார் பல்லைக்கழக மாணவி, நேற்று காலை 10 மணியளவில் உடலில் காயங்களுடன் அறையில் கிடந்ததைக் கண்டு, அவரின் தோழிகளில் ஒருவர் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் Physiotherapy இளங்கலை பட்டப்படிப்பு மாணவியான அவர், பல்கலைக்கழகத்தின் மாணவர் தங்கும் விடுதியான அருகில் உள்ள கொண்டோமினியம் வீட்டில் தன்னுடன் பயிலும் ஐந்து சக மாணவிகளுடன் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மாணவியுடன் தங்கியிருந்த ஐந்து மாணவிகள், பல்கலைக்கழக விடுமுறையையொட்டி, கடந்த ஜுன் 21 ஆம் தேதி தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் அந்த மாணவி மட்டும் தேர்வுக்காகப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் வீடு திரும்பாமல், தனியொருவராக அந்த விடுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மாணவியின் மடிக்கணினி, கிரேடிட் கார்ட்டு உட்பட விலை உயர்ந்த சிலப் பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த மாணவின் உடல் செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அந்த தங்கும் விடுதியிலிருந்து மாணவியின் உடலை மீட்டு, போலீஸ் வண்டியில் வைக்கப்படும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட மாணவி, பாலியல் தாக்குதலுக்கு ஆளானதற்கான எந்தவோர் அறிகுறியும் இல்லை என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்துள்ளார்.

செர்டாங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அந்த மாணவியின் தலையில் ஏற்பட்ட கூர்மையான காயம்தான் மரணத்திற்கானக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவர்களின் தங்கும் விடுதியாகப் பயன்படுத்தப்பட்ட முத்தியாரா வில் கொண்டோமினியம் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது அந்த மாணவி, தான் தங்கியிருந்த அறையில் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்துள்ளார். மருத்துவ அதிகாரிகள் சோதனையிட்டதில் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டது என்று ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் குறிப்பிட்டார்.

அந்த வீட்டு வளாகத்திற்குள் சந்தேகப் பேர்வழிகள், அத்துமீறி வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான எந்தவோர் அறிகுறியும் இல்லை.

அந்த மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை ஏசிபி நோர்ஹிஸாம் வன்மையாக மறுத்தார்.

மாணவியின் மரணம், கொலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளறதாக அவர் மேலும் கூறினார்.

இக்கொலை தொடர்பில் தகவல் கொண்டுள்ளவர்கள் 012-9307860 என்ற தொலைபேசி எண்ணில் விசாரணை அதிகாரி ஏசிபி முகமட் ஹுஸ்னி ஹுசேனைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.

அதே வேளையில் இவ்விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஏசிபி நோர்ஹிஸாம், விசாரணைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பகிர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS