A- உட்பட 10A பெற்ற அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர், ஜூன்.26-

2024 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் திட்டத்தில் இடம் வழங்கப்படும். சில பாடங்களில் A- பெற்றவர்களுக்கும் இது பொருந்தும்.

A- உட்பட 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு இடம் வழங்கப்படும் என்று அமைச்சரவை ஒப்புக் கொண்டதாக கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது, இனம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் மாணவர்களின் கல்வி அடைவு நிலையை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தக் கொள்கையானது, கடந்த ஆண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க மேற்கொள்ளப்படுகிறது.

2024 எஸ்பிஎம்மில் 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து சிறந்த மாணவர்களும் தங்கள் கல்வியைத் தொடர வாய்ப்பு இருப்பதை உறுதிச் செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கான தற்போதைய பூமிபுத்ரா ஒதுக்கீடு தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதில் எந்த பாதிப்பும் இல்லை என்று கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

நாட்டின் எதிர்காலச் சொத்துக்களான அனைத்து மாணவர்களின் நலனுக்காக மடானி அரசாங்கம், கல்வி நடைமுறையை தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் அது உறுதி அளித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS