கோலாலம்பூர், ஜூன்.26-
சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் ஃபிசியோதெரபி பட்டப்படிப்பு மாணவியான 20 வயது மனிஷாபிரிட் கவுர் அகாராவின் மரணம் தொடர்பில் நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனிஷாபிரிட் கவுர் அகாராவின் படுகொலை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்க விடுத்த வண்ணம் உள்ளனர்.
“மாணவியின் குடும்பத்திற்கு நீதி நிலை நாட்டப்படுவதையும், உண்மை வெளிப்படுவதையும் உறுதிச் செய்ய விசாரணை வெளிப்படையாகவும், நியாயமாகவும், துரிதமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறைத் துணை அமைச்சர் அய்மான் அதிரா சாபு கேட்டுக் கொண்டுள்ளார்.
மாணவின் மரணம் குறித்து சிப்பாங் மாவட்ட போலீஸ் துறை மேற்கொண்டு வரும் விசாரணையைத் தாம் அணுக்கமாகக் கண்காணித்து வரப் போவதாக அந்த பெண் துணை அமைச்சர் உறுதித் தெரிவித்துள்ளார்.
சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த மனிஷாபிரிட் கவுர் அகாரா, சைபர்ஜெயாவில் அவர் தங்கியிருந்த காண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில், தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாணவிகள் தாங்கள் வசிக்கும் இடத்திலும் படிக்கும் இடத்திலும் பாதுகாப்பாக இருப்பதை எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யப்பட வேண்டும் என்று மஇகா மகளிர் தலைவி என். சரஸ்வதி தெரிவித்தார்.
மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி, இன்று காலை கோலாலம்பூர், லோக் யூ மின்சுடலையில் நடைபெற்ற மனிஷாபிரிட் கவுர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, அவரின் குடும்பத்தினருக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
இதனிடைய மனிஷாபிரிட் கவுர் மரணம் தொடர்பில் தொடர்ந்து மௌனம் காத்து வருவதாகக் கூறப்படும் சைபர்ஜெயா பல்கலைக்கழகம், சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்திற்கும், விமர்சனங்களுக்கும் இலக்காகியுள்ளது.