இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதா? பாஸ் தலைவருக்கு எதிராக போலீசில் புகார்

ஜார்ஜ்டவுன், ஜூன்.27-

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மருமகனும், பாஸ் கட்சியின் சுங்கை பூலோ தொகுதித் தலைவருமான ஸாஹாருடின் முகமட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அந்த பாஸ் தலைவருக்கு எதிராக 3R சட்டம் பாய வேண்டும். இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும், சகிப்புத்தன்மைக்கும் ஊறு விளைவித்து வரும் பாஸ் தலைவரின் மருமனுக்கு எதிராக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த குழுவினர் வலியுறுத்தினர்.

மலேசிய ஆயுதப் படையில் சீன சமூகத்தைச் சேர்ந்த ஜோனி லிம் எங் செங்கிற்கு லெப்டனன் ஜெனரல் பதவி வழங்கப்பட்டதை கேள்வி எழுப்பியுள்ள ஸாஹாருடின் முகமட், வருகின்ற 2058 ஆம் ஆண்டில் சீன சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமராகுவதற்கு இது வழிவகுக்கும் என்று இனத்துவேஷத் தன்மையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவேற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த பாஸ் தலைவரின் நடவடிக்கையானது, இன நல்லிணக்கத்தைப் புறந்தள்ளி, மலாய்க்காரர்களுக்கு வெறுப்பைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

செபராங் பிறை தெங்கா மாவட்ட இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெர்மாதாங் பாவோ இளைஞர் குழுவினர் ஆகியோர் ஒருங்கிணைந்து புக்கிட் மெர்தாஜாம், போலீஸ் நிலையத்தில் இப்போலீஸ் புகாரை அளித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS