ஈப்போ, ஜூன்.27-
பள்ளி விளையாட்டுப் போட்டியை பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விரிவான விசாரணை மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.
கெரியான் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தின் போது, விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்த பாகிஸ்தான் நாட்டவருக்கு பள்ளி சார்பில் மிகப் பெரிய கெளரவிப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்தும் விசாரணை செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
கெரியான் மாவட்டம், சிம்பாங் அம்பாட் செமங்கோலில் உள்ள சாமா காகா தேசிய தொடக்கப்பள்ளியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் நாட்டவருக்கு அளிக்கப்பட்ட கெளரவிப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பலர் வினவி வருகின்ற வேளையில் ஃபாட்லீனா சீடேக் எதிர்வினையாற்றினார்.