ஈப்போ, ஜூன்.28-
பேரா, ஹூத்தான் மெலிந்தாங், பாகான் பாசீர் லாவுட்டில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோவில் மற்றும் 21 வீடுகள் அழிந்தன.
இந்தத் தீச் சம்பவம் குறித்து அதிகாலை 4.50 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப் படையின் உதவி இயக்குநர் சபாரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.
தொடக்கத்தில் ஐந்து வீடுகளே தீப்பற்றிக் கொண்டதாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில் நேரில் சென்ற போது 21 வீடுகளில் தீ சூழ்ந்து கொண்டது தெரிய வந்ததாக சபாரோட்ஸி நோர் குறிப்பிட்டார்.
தீயை அணைக்கும் பணியில் தெலுக் இந்தான் தீயணைப்பு நிலையத்துடன், சுங்கை தியாங்கில் உள்ள தொண்டூழிய வீரர்களும் ஈடுபட்டதாக அவர் விளக்கினார்.
தீணை அணைக்கும் பணி, காலை 7.30 மணிக்கு முழுமை பெற்றது. அழிந்த வீடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் சற்று சேதமுற்ற வீடுகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.