ஈப்போ, ஜூன்.28-
ஈப்போ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தக்கூடிய மர்ம சத்தம், தொடர்ந்து நீடித்து வருகிறது.
அந்த பலத்த சத்தம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அது, ஈப்போவிற்கு அருகில் நடைபெறும் கல்லுடைப்புச் சத்தமோ அல்லது போலீஸ் துறையின் துப்பாக்கிச் சூட்டு பயிற்சியோ அல்ல என்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இந்த வெடி சத்தத்தின் எதிரொலியாக வீடுகளில் பெரும் அதிர்வு ஏற்பட்டு வரும் வேளையில் இதற்கான குறிப்பிடத்தக்க காரணத்தை இன்னும் கண்டறிய முடியவில்லை என்று பேரா மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சராணி முகமட் தெரிவித்தார்.
இந்த மர்ம வெடிச் சத்தம், இன்னமும் போலீஸ் துறையின் கீழ் புலன் விசாரணையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த அதிர்வு குறித்து என்ன பதிலைச் சொல்வது என்பது குறித்து தமக்கும் புரியவில்லை என்று டத்தோ ஶ்ரீ சராணி குறிப்பிட்டார்.