கோலாலம்பூர், ஜூன்.28-
அதிகரித்து வரும் சவால் நிறைந்த மற்றும் நிச்சயமற்ற உலகளாவிய அரசியல் சூழலில், எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ள ஆயுதப் படையினர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். குறிப்பாக ஆகக் கடைசியான தொழில்நுட்பத் தளவாடங்களுக்கு ஏற்ப மலேசிய ஆயுதப் படையினர் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.
ஈரான்-இஸ்ரேல் போரும், காஸாவில் நீடித்த மோதலும், அனைத்துலகச் சட்டங்கள், இனி உலகளாவிய அமைதியைப் பாதுகாக்கப் போதுமானதாக இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
“யார் நண்பர், யார் எதிரி என்று நமக்குத் தெரியாததால், எந்தவொரு சாத்தியத்தையும் சமாளிக்க மலேசிய ஆயுதப் படையினர், எப்போதும் தயாராகவும், அண்மைய தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் பெற்றவர்களாகவும் இருப்பது மிக முக்கியம் என்று மாமன்னர் வலியுறுத்தினார்.
இன்று கோலாலம்பூர், சுங்கை பெசியில் உள்ள கேம் பெர்டானாவில் மலேசிய ஆயுதப்படையின் கேடட் அதிகாரிகளுக்குப் பதவியேற்புச் சடங்கிற்கான அணிவகுப்பை பார்வையிட்டப் பின்னர் நடைபெற்ற பதவி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வின் போது மாமன்னர் இதனைத் தெரிவித்தார்.