புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்: 600க்கும் மேற்பட்டோர் காயம்

புவனேஸ்வர், ஜூன்.28-

ஒடிசா புரி ஜெகந்நாதர் கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் பக்தர்கள் அதிகமாகக் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 600க்கும் மேற்பட்டோர் அவதிக்குள்ளாகினர். நெரிசலில் சிக்கியதில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பலர் காயமுற்றனர். அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று கோலாகமாகத் தொடங்கியது. காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரத யாத்திரைக்கான சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோவிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவில் வரை இழுக்கப்படும். இந்த ரத யாத்திரையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே சமயத்தில் குவிந்தனர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, பாலகன்டி பகுதியில் தேர் சிக்கிக் கொண்டது.

இந்நிலையிக் கூட்ட நெரிசலில் சிக்கி 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். அவர்களில் 70 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் சிகிச்சை அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

WATCH OUR LATEST NEWS