ரவாங், ஜூன்.28-
ரவாங், டெம்ப்ளர் பார்க், கஞ்சிங் நீர் வீழ்ச்சியில் குளித்துக் கொண்டு இருந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர், 6 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயத்திற்கு ஆளானார்.
இந்தச் சம்பவம் குறித்து இன்று சனிக்கிழமை காலை 11.50 மணியளவில் தீயணைப்பு, மீட்புப் படையினர் அவசர அழைப்பைப் பெற்றனர் என்று அதன் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
நீர் வீழ்ச்சியின் பாறை மீது நின்று குளித்துக் கொண்டு இருந்த போது கால் இடறி அந்த வெளிநாட்டுப் பெண் கீழே விழுந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அந்த நியூசிலாந்துப் பெண்மணியை மலையிலிருந்து கீழே கொண்டு வருவதற்கு எழுவர் கொண்ட வீரர்கள் குழு, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.