ஆடவர் 11 மாடியிலிருந்து கீழே விழுந்தார்

கோலாலம்பூர், ஜூன்.28-

கோலாலம்பூர், ஜின்ஜாங் உத்தாரா, தாமான் பெரிங்கின், ஜாலான் மீர் ஒஃப், பிபிஆர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 11 மாடியிலிருந்து கீழே விழுந்து ஆடவர் ஒருவர் மரணமுற்றார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நிகழ்ந்தது. இரவு விடுதிப் பணியாளரான 25 வயது நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் சுகார்னோ முகமட் ஸாஹாரி தெரிவித்தார்.

11 ஆவது மாடியில் நின்று கொண்டு கைப்பேசியில் உரக்கப் பேசிக் கொண்டு இருந்த நபர், திடீரென்று கீழே விழுந்ததை ஒன்பதாவது மாடியில் இருந்த ஒருவர் நேரில் பார்த்துள்ளார்.

தனது மகன், தனது காதலியுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டு இருந்த போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அந்நபரின் தாயார் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் தொடர்பில் அந்த ஆடவரின் காதலியிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்து இருப்பதாக ஏசிபி அஹ்மாட் சுகார்னோ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆடவரின் மரணத்தை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS