நண்பா திட்டம்: உறவுகளை வலுப்படுத்துகிறது, அரசாங்க தகவல்களை வழங்கும் முறையை விரிவுபடுத்துகிறது

கோலாலம்பூர், ஜூன்.28-

கோலாலம்பூர், பந்தாய் டாலாம், IWK ஏகோ பார்க்கில் ஜே-கோம் எனப்படும் சமூக தொடர்பு இலாகாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இளையோர்களுக்கான நாடி அஸ்பிராசி நேஷனல் பெர்சாமா அனாக் மூடா அல்லது நண்பா என்ற திட்டத்தைத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் இன்று சனிக்கிழமை காலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

நண்பா என்பது தமிழில் தோழர் என்ற வார்த்தையிலிருந்து உதயமானதாகும். இந்திய சமூகத்துடன் குறிப்பாக, இளையோர்களிடையே அணுக்கமான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் தகவல்களை ஆக்ககரமான முறையில் விரிவாக வழங்கப்படுவதற்கும் மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கவே நண்பா என்று இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தமது உரையில் தெரிவித்தார்.

இந்தத் திட்டம், அரசாங்கத்தின் கொள்கைகள், முன் முயற்சிகள் மற்றும் வழங்கப்படும் பல்வேறு வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள், இந்தியச் சமுதாயத்திற்குச் சென்றடைந்து, அவர்களை மேம்படுத்தும் ஒரு பயனான இருவழி தொடர்புத் தளமாக செயல்படுகிறது என்று அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் குறிப்பிட்டார்.

மடானி அரசாங்கத்தின் கூடுதலானச் சேவைகளையும், தகவல்களையும் மக்களுக்கு நேரடியாக வழங்குவதில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த நண்பா திட்டம் பிரதிபலிப்பதாக அமைச்சர் விளக்கினார்.

இந்த நண்பா நிகழ்ச்சியின் உள்ளடக்கங்களில், அரசுத் துறைகள் மற்றும் அரசாங்க ஏஜென்சிகள் வழங்கும் சேவைகள் மக்களை சென்றடைவதற்கு அதற்கான முகப்பிடங்கள், ரஹ்மா மடானி விற்பனை, வண்ணம் தீட்டும் போட்டிகள், புதையல் வேட்டை மற்றும் மெக்டோனஸுடன் வேடிக்கையானச் செயல்பாடுகள் ஆகியவை இடம் பெற்று இருந்தன. இந்நிகழ்வு காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீலுடன் கலந்து கொண்ட மித்ரா பணிக் குழுத் தலைவர் P. பிரபாகரன் விவரிக்கையில், நண்பா என்ற திட்டம் இந்திய சமூகத்திற்கு தகவல்களை கொண்டு சேர்க்கும் ஓர் அற்புதமானத் திட்டம் என்றார்.

இந்திய சமூகத்தினரிடையே ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்கும், தகவல் அறிந்த சமூகமாகத் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும், முற்போக்கான, வளமான மற்றும் ஒன்றுபட்ட சமூகத்தை நோக்கிய தேசிய அபிலாஷைகளை ஆதரிப்பதற்கும் இந்த நண்பா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS