கோலாலம்பூர், ஜூன்.28-
நாட்டின் நடப்பு அரசியல் சூழலை எதிர்கொள்வதில் பாஸ் கட்சியின்றி, பெர்சத்து கட்சி தன்னிச்சையாகச் செயல்பட முடியாது என்பதை அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவேதான் அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும், அவற்றைச் சமாளிக்கவும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் கீழ் பாஸ் கட்சியுடனான ஒத்துழைப்பை பெர்சத்து தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்று முகைதீன் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பெர்சத்து தனியாக செயல்பட்டதற்கும், பாஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டதற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை உணர முடிகிறது. எனவேதான் பாஸ் கட்சியுடனான ஒத்துழைப்பை அது நாடி வருகிறது என்று முகைதீன் தெரிவித்தார்.