உரிமம் பெற்ற கடன் வழிமுறைகளை பயன்படுத்த மக்கள் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன்.28-

குறைந்த வருமானம் மற்றும் நம்பிக்கையிழந்த தரப்பினரைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதிக்கச் செய்து வரும் ஆலோங் எனும் சட்டவிரோத வட்டி முதலைகளின் நடவடிக்கைகளை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு கடுமையாகக் கருதுவதாக அதன் அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

ஆலோங் எனும் வட்டி முதலைகளிடம் சட்டவிரோதமாகக் கடனைப் பெறுகின்றவர்கள் பெரும் பகுதியினர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பவர்கள் ஆவர். அத்தகைய மக்களைப் பயன்படுத்தி, அதிகப்படியான வட்டி விகிதங்கள் விதிப்பது, வட்டிப்பணம் கேட்டு அவர்களைக் துன்புறுத்துவது, மற்றும் வன்முறை மூலம் கடன் என்ற தீய சுழற்சியில் சிக்க வைப்பது முதலிய செயல்களில் வட்டி முதலைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை வேரோடு ஒழிக்க கடுமையான மற்றும் விரிவான நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் துறையினரை தாம் வலியுறுத்தியிருப்பதாக ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

பினாங்கு, தாமான் குளுகோர் உத்தாமாவில் மூன்று தரை வீடுகள், வட்டி முதலைகளால் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துரைக்கையில் ங்கா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.

இது போன்ற சிக்கல்களையும், துன்புறுத்தலையும் தவிர்க்க உரிமம் பெற்ற கடன் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS