புவனேஸ்வர், ஜூன்.29-
இந்தியாவில் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிக் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று முன்தினம் கோலாகமாகத் தொடங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், 3வது நாளான இன்று அதிகாலை 4:30 மணியளவில் ஸ்ரீ கண்டிச்சா கோவிலுக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக கூடி இருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக புரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
நேற்று ஏற்பட்ட நெரிசலில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.